புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 10 நாட்களாக பெய்து வரும் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.5,000 நிவாரணமாக வழங்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். புதுவையில் ஞாயிறுக்கிழமை தொடங்கி கனமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியும், ஆறுகளில் வெள்ளப்பெருக்கால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் ஆயிரம் ஏக்கர் அளவில் பயிர்கள் நீரில் மூழ்கின. இந்நிலையில், இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஏழை தொழிலாளிகள், கட்டுமான தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள் அனைவரும் எவ்வித வருமானமுமின்றி பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் வியாபாரமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே மக்களுக்கு நிவாரணமாக புதுச்சேரி மாநில அரசு ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் அளிக்கும் உத்தரவை உடனடியாக பிறப்பிக்க வேண்டும். மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள தண்ணீரை வெளியேற்ற வேண்டும். தொடர்ந்து, பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீரை மக்களுக்கு கொடுக்கவும், மின்சாரம் தடையில்லாமல் மக்களுக்கு கிடைப்பதற்கு ஆவணம் செய்ய வேண்டும் என நாராயணசாமி வலியுறுத்தினார். கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பேரிடர் மீட்புத்துறை இருக்கிறதா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.