ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் ஏரியில் இருந்து 900 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. ஊத்துக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள ஆந்திர மாநில பகுதிகளான நாகலாபுரம், நந்தனம், பிச்சாட்டூர் பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் ஏரி நிரம்பியது. இந்த ஏரியின் கொள்ளளவு 281 மில்லியன் கன அடியாகும். தற்போது, 279.07 மில்லியன் கன அடி உள்ளது. 280 மில்லியன் கன அடி நீர் இருப்பு வந்தால் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். நேற்று 280 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்ததால் தண்ணீர் திறக்கப்பட்டது.
பிச்சாட்டூர் ஏரிக்கு மழைநீர் 250 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. இதனால், ஏரியின் பாதுகாப்பு கருதி ஒரு மதகு வழியாக வினாடிக்கு 100 கன அடி வீதம் திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக 11 மணிக்கு 300 கன அடி வரை திறந்து விடப்பட்டது. பிற்பகல், 3 மணிக்குமேல் 1200 கன அடி திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் தற்போது நாகலாபுரம், நந்தனம், காரணி வழியாக சுருட்டபள்ளி அணை நிரம்பி வழிந்து ஊத்துக்கோட்டை ஆரணியாற்றில் பாய்கிறது. இந்த தண்ணீர் திறக்கப்பட்டு ஆரணியாற்றில் தண்ணீர் வருவதால் தமிழக விவசாயிகள் 6,600 ஏக்கர் விவசாய நிலமும், ஆந்திர விவசாயிகள் 5,500 ஏக்கரும் பயனடைவார்கள். மேலும், தண்ணீர் திறக்கப்பட்டு ஒரு மணி நேரத்தில் மூடி விட்டார்கள். மழை தொடர்ந்து, தண்ணீர் திறந்தால் ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக பழவேற்காடு கடலில் இந்த தண்ணீர் கலக்கும்.