கரூர் : கரூர் வஉசி தெருவில் எந்த நேரமும் விழும் வகையில் ஆபத்தான நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மரை உடனடியாக மாற்ற வேண்டும் என பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை மில்கேட் பகுதியில் இருந்து வடக்குத்தெரு செல்லும் சாலையில் வஉசி தெரு உள்ளது. தெருவின் இருபுறமும் குடியிருப்புகளும், தனியார் மருத்துவமனை மற்றும் பஸ்பாடி நிறுவனமும் உள்ளது.
இந்நிலையில் வஉசி தெருவில் குடியிருப்பை ஒட்டி டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில் இருந்து பல்வேறு குடியிருப்புகளுக்கும், நிறுவனங்களுக்கும் மின்சப்ளை வழங்கப்பட்டு வருகிறது. டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு ஆண்டுகள் பல கடந்துள்ள நிலையில், தற்போது கீழ்பாகம் முதல் மேல்பாகம் வரை சிமெண்ட் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எந்த நேரமும் விழும் என்ற ஆபத்தான நிலையில் உள்ளது.
இதனை மாற்றித் தர வேண்டும் என இந்த பகுதியினர் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மக்கள் நலன் கருதி இதனை மாற்ற தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.