போடி : தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேலும், கடந்த ஒரு மாதமாக தமிழக-கேரள எல்லைப்பகுதியான இடுக்கி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே மலைப்பகுதிகளில் சிறு, சிறு அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. இந்நிலையில், போடி மலையடிவாரமான முந்தலிலிருந்து 17 கொண்டை ஊசி வளைவுகளோடு 1,600 அடி உயரத்தில் போடிமெட்டுக்கு சாலை செல்கிறது. இதில், 8வது கொண்டை ஊசி வளைவு சாலையை கடந்து புலிகள் நடமாடும் பகுதியான புலியூத்தில் நீண்ட உயரமான மலை அருவியில் இருந்து தண்ணீர் கொட்டுகிறது.
இச்சாலையை கடக்கும் சுற்றுலாப் பயணிகள் அருவியை ரசித்து செல்பி எடுக்கின்றனர். மேலும், இந்த அருவிநீர் மலை வழியாக கடந்து கொட்டகுடி ஆற்றில் கலந்து வருகிறது. மேலும், கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், விவசாயத்துக்கு பயன்படும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.