மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே 40 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளின்றி தவித்து வருவதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கள்ளப்பட்டி காலனி எனப்படும் முத்தையாபுரம் கிராமத்தில் 90-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. 2 தெருக்களை மட்டுமே கொண்ட இந்த கிராமத்தில் சாலை, கல்வி நீர் வசதியின்றி இருப்பதாக கூறுகின்றனர். வீடுகளில் இருந்து வெளிவரும் கழிவு நீர் தெருக்களில் தேங்கி கிடப்பதால் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சேற்றில் நடந்து செல்லும் அவல நிலை இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
தினசரி சேற்றில் நடந்து செல்வதால் கால்கள் அழுகிவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளனர். குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். முத்தையாபுரம் கிராம மக்கள் படும் துயரங்களை ஆய்வு செய்து தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்து அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.