சேந்தமங்கலம் : எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பொட்டிரெட்டிப்பட்டியில் நிலத்தடி நீர் மற்றும் குடிநீர் ஆதாரமாக, திம்மாங்குளம் விளங்குகிறது. சுமார் 8 ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ளது. இந்த குளத்தின் மறுகரையில் 10க்கும் மேற்பட்ட விவசாய தோட்டங்கள் உள்ளது. இந்த தோட்டங்களுக்கு குளத்துக்குள் இறங்கி கடந்து செல்வது வழக்கம். குளத்தில் ஓரளவு தண்ணீர் இருக்கும் வரை, விவசாயிகள் தண்ணீரில் இறங்கி, கால்நடைகளுடன் கடந்து, விவசாய நிலங்களுக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.
குளத்தில் தண்ணீர் அதிகமுள்ள நேரங்களில், விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாது. தற்போது கொல்லிமலையில் பெய்த தொடர் மழை காரணமாக, திம்மாங்குளத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் குளத்தை கடந்து மறுகரைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பயிர்களை பராமரிக்கவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
சிலர் ஆபத்தை உணராமல் கழுத்தளவு தண்ணீர் உள்ள தற்போது கால்நடைகளுடன், குளத்தை கடந்து செல்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம், விவசாயிகள் நலன் கருதி, குளத்தை கடந்து செல்ல வசதியாக சிறுபாலம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.