×

எர்ணாவூரில் கட்டிட தொழிலாளி போல் பதுங்கி இருந்த ஜார்கண்ட் மாநில மாவோயிஸ்ட் தீவிரவாதி சுற்றி வளைத்து கைது: அடைக்கலம் கொடுத்த நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை

திருவொற்றியூர்: சென்னை எர்ணாவூரில் கட்டிட தொழிலாளி போல் பதுங்கி இருந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் தீவிரவாதி ஒருவனை மாநகர போலீசார் உதவியுடன் ஜார்கண்ட் போலீசார் கைது செய்தனர். சென்னை எர்ணாவூர், சுனாமி குடியிருப்பு அருகே ஒரு தனியார் நிறுவன அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கட்டுமான தொழிலாளர்களும் தங்கி வேலை செய்து வருகின்றனர். ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த துக்கத்ஜி கஞ்சு(30) என்ற மாவோயிஸ்ட் தீவிரவாதி கட்டிட தொழிலாளி போல் பதுங்கி இருப்பதாக ஜார்கண்ட் தீவிரவாத ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி ஜார்கண்ட் தீவிரவாத ஒழிப்பு போலீசார் தீவிரவாதியை பிடிக்க மாநகர காவல் துறையின் உதவியை நாடினர்.

அதைதொடர்ந்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கட்டிட தொழிலாளி போல் பதுங்கி உள்ள மாவோயிஸ்ட் தீவிரவாதியை பிடிக்க அனைத்து உதவிகளையும்  செய்ய எண்ணூர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.  அதன்படி நேற்று இரவு ஜார்கண்ட் தீவிரவாத ஒழிப்பு போலீசாருடன் எண்ணூர் போலீசார் கட்டிட தொழிலாளிகள் தங்கி உள்ள சுனாமி குடியிருப்பில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கட்டிட தொழிலாளிகள் போல் கடந்த 6 மாதங்களாக எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் தங்கி இருந்தது  தெரியவந்தது. அதைதொடர்ந்து அதிரடியாக நேற்று இரவு மாவோயிஸ்ட் தீவிரவாதி துக்கத்ஜி கஞ்சுவை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இவன் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாத கும்பலுடன் நெருங்கிய தொடர்பு உடையவர் என்றும், இவன் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது  தெரியவந்தது. தனது உறவினருடன் கூட்டாக சேர்ந்து, ஜார்கண்ட் மாநிலத்தில் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்து சென்னையில் கட்டிட தொழிலாளியாக பதுங்கி இருந்தது தெரியவந்து. கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் தீவிரவாதி துக்கத்ஜியை ஜார்க்கண்ட் மாநில போலீசாரிடம் எண்ணூர் போலீசார் ஒப்படைத்தனர். அதைதொடர்ந்து ஜார்கண்ட் மாநிலத்துக்கு அந்த மாநில தீவிரவாத ஒழிப்பு போலீசார் ரயில் மூலம் தீவிரவாதியை  அழைத்து சென்றனர். மேலும், தீவிரவாதிக்கு அடைக்கலம் கொடுத்த நபர்களிடம் எண்ணூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Jharkhand ,Maoist ,Ernakulam , Maoist militant arrested
× RELATED ஜார்க்கண்டில் 12 மாவோயிஸ்ட்கள் சரண்