திருவொற்றியூர்: மேற்கு வங்க மாநிலம், மங்கள்கோட் பகுதியை சேர்ந்தவர் ஆவின் தாஸ் (43). ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர். இவரை அதே பகுதியை சேர்ந்த 7 பேர் கும்பல், கடந்த ஜூன் 12ம் தேதி வெட்டி படுகொலை செய்தது. இவ்வழக்கில் 6 பேர் கைதான நிலையில், முக்கிய குற்றவாளியான முகந்தர் ரகுமான் சூரத் (28) என்பவர் தலைமறைவானார்.
இந்நிலையில், சென்னை மணலி புதுநகரில் தங்கி வேலை செய்யும் வடமாநில நண்பர்களின் வீட்டில் முகந்தர் ரகுமான் சூரத் பதுங்கியிருப்பதாக, அவரது செல்போன் சிக்னலை வைத்து மேற்குவங்க போலீசார் கண்டறிந்தனர்.
இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை மணலி புதுநகர் போலீசார் உதவியுடன் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு ஒரு வீட்டில் பதுங்கியிருந்த கொலை குற்றவாளி முகந்தர் ரகுமான் சூரத்தை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று மேற்கு வங்க மாநிலத்துக்கு ரயிலில் போலீசார் அழைத்து சென்றனர்.