திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் பம்பை ஆற்றில் கடும் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ேகாயில் நடை கடந்த 16ம் தேதி திறக்கப்பட்டது. மறுநாள் முதல் 21ம் தேதி வரை 5 நாட்கள் தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் பம்பை அணை நிரம்பியதை தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பம்பை ஆற்றில் கடும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த 3 நாட்களுக்கும் சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் கூட்டம் நடந்தது. அதில், அடுத்த 3 நாட்களும் சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே சபரிமலை நடை அடைக்கப்பட்டது தெரியாமல் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு சென்றனர். அவர்களை மாநில எல்லையில் வைத்து போலீசார் திரும்பி அனுப்பி வருகின்றனர். இதுபோல் நிலக்கல் பகுதியிலும் ஏராளமான பக்தர்கள் வந்து தங்கியிருந்தனர். அவர்கள் ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். சபரிமலையில் மண்டல கால பூஜைக்கு முன்னதாக நவம்பர் 2ம் தேதி சித்திரை ஆட்டத்திருநாள் பூஜைகளுக்காக நடை திறக்கப்படுகிறது. மறுநாள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.