திருச்சி: திருச்சி தில்லைநகரில் மாவட்ட கூட்டுறவு வீட்டு வசதி கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதன் செயலாளர் கார்மேகம் (53). தலைவராக அதிமுகவை சேர்ந்த எம்.குமார் இருந்தார். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இதில் மூத்த உறுப்பினர்களுக்கு அரசு நிர்ணயித்த அன்றைய விலையின்படி அரசு இடங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2016-17ம் ஆண்டில் தில்லைநகர், தென்னூரில் உள்ள அரசு இடத்தில் 25 ஆயிரம் சதுர அடியை 6 பேருக்கு விற்பனை செய்ய செயலாளராக இருந்த கார்மேகம் அனுமதி வழங்கினார். இதையடுத்து 6 பேருக்கும் இடம் விற்பனை செய்யப்பட்டது. இதற்கிடையில் அரசு நிர்ணயித்த விலையை விட சந்தை மதிப்பில் குறைவாக விற்பனை செய்ய அனுமதி வழங்கியும், அரசுக்கு ரூ.6.50 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும் கார்மேகம் மீது புகார் எழுந்தது. இதுகுறித்து திருச்சி மாவட்ட லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கடந்தாண்டு புகார் சென்றது. போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
இந்நிலையில் திருச்சி கருமண்டபத்தில் உள்ள செயலாளர் கார்மேகம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் அதிரடியாக காலை 7 மணி முதல் மதியம் 2 வரை சோதனை நடத்தினர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், அரசு நிர்ணயித்த ஒரு சதுர அடி விலையான ரூ.3 ஆயிரத்தை மாற்றி ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ரூ.6.50 கோடி இழப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக வழக்கு பதிவான நிலையில் கார்மேகம் வீட்டில் சோதனை நடத்தி 45 பவுன் நகைகள், ரூ.2.75 லட்சம் ரொக்கம் மற்றும் 150 பவுன் நகைகள் அடகு வைத்திருப்பதற்கான நகை அடமான ரசீது இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் வழக்குக்கு ஆதாரமாக இணைக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கார்மேகம் கைது செய்யப்படுவார். கார்மேகம் தற்போது பொன்நகர் கிளையில் வேலை செய்து வருகிறார்’ என்றனர்.