×

காலாவதியான மருந்து பொருட்களை முறையாக அழிக்க மருந்து பயன்பாடு, கழிவு மேலாண்மை கொள்கை: சுற்றுசூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் தகவல்

சென்னை: காலாவதியான மருந்து பொருட்களை முறையாக அழிக்கும் வகையில் தமிழ்நாட்டிற்கான தனி மருந்து பயன்பாடு மற்றும் கழிவு மேலாண்மை  கொள்கை உருவாக்கப்படும் என சுற்றுசூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.  காவிரி ஆற்றில் மருந்து பொருட்கள் கலந்து ஆற்றுநீர் மாசடைவதாக மத்திய அறிவியல் தொழில் நுட்ப துறையின் நீர் தொழில் நுட்ப பிரிவு, இங்கிலாந்தின் சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக் கவுன்சில் ஆகியவற்றின் நிதி உதவியுடன், இந்திய தொழில்நுட்ப கழகம், சென்னை குழு நடத்திய ஆய்வு குறித்து வெளியிடப்பட்ட செய்தியின் தொடர்ச்சியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி, சுற்றுசூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையிலான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் இத்துறையின் முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாஹு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 ஆய்வுக் கூட்டத்தில் இந்திய தொழில்நுட்ப கழகம், தங்களின் ஆய்வு குறித்த விரிவான விளக்கத்தை அமைச்சருக்கு எடுத்துரைத்தனர். பிறகு தற்போது காவிரி ஆற்றில் கலந்துள்ள மருந்துப் பொருட்கள், மக்களுக்காக மருத்துவத்திற்கு பயன்படுத்தும் அளவினைவிட மிகமிக குறைந்த அளவில் இருப்பதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது. தற்போது அதிகமாக பயன்பாட்டில் உள்ள மருந்து பொருட்களையும் ஆய்வு செய்வது சிறப்பாக இருக்கும். ஆற்றுநீரில் இம்மருந்து பொருட்களுடன் நகராட்சி கழிவுகளும் கலப்பதினால் மாசு ஏற்படுகிறது என்பதை உறுதி செய்ய நேரடியாக மருந்து பொருட்களாக ஆய்வு செய்யாமல், அவை உடலில் ஏற்படும் வேதியியல் மாற்றத்தினால் உருவாகும் வேதி கலவைகளையும் கருத்தில் கொண்டு ஆய்வு செய்யப்பட வேண்டும். ஆற்றில் இம்மருந்து பொருட்கள் கலந்துள்ள அளவினை மிகவும் துல்லியமாக ஆய்வு செய்ய தற்போது பயன்படுத்தப்பட்டுள்ள உபகரணங்களை விட நவீன வகை உபகரணங்களை பயன்படுத்துதல் சிறப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.  

இக்கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது:  ஆய்வில் குறிப்பிடப்பட்ட மருந்து காரணிகள் ஆற்றில் மிகமிக குறைந்த அளவில் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத அளவில் இருந்தாலும் புதிய முயற்சியாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது ஒரு சிறப்பம்சம். ஆய்வினை மேலும் இரண்டு ஆண்டுகள் தொடர வேண்டும். பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மருந்துகளை மருத்துவர்கள் வழிகாட்டுதலின் படி தேவையான அளவிற்கு மட்டும் எடுத்துக்கொண்டு மீதமுள்ள மருந்து பொருட்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுகளுடன் கலக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் மருந்தகங்களில் காலாவதியான மருந்து பொருட்களை குப்பை கிடங்குகளில் வெளியேற்றாமல் சேகரித்தும் மற்றும் மக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்தாத மருந்து பொருட்களை மீண்டும் மருந்தகங்களால் பெறப்பட்டு, தொழிற்சாலைகளுக்கே திரும்ப அனுப்பப்பட்டு முறையாக அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்காக தமிழ்நாட்டிற்கான தனி மருந்து பயன்பாடு மற்றும் கழிவு மேலாண்மை கொள்கை உருவாக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Minister ,Meyyanathan , Environment Minister Meyyanathan, Information
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...