சண்டிகர்: ‘சமூகத்தின் கடைசி மனிதன் வரை முன்னேற்றக் கூடிய ‘அந்தியோதயா’ கொள்கைப்படி, ஒன்றிய அரசு செயல்படுகிறது’ என ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே கூறினார். அரியானாவின் மகேந்திரகர் மாவட்டம் படிக்ரா கிராமத்தில் அம்பேத்கர் பவன் மற்றும் சந்த் கபிர் தாஸ் நூலகம் திறப்பு விழாவில் நேற்று பங்கேற்ற ஒன்றிய சமூக நீதித்துறை அமைச்சர் ராம்தாஸ் அதவாலே பேசியதாவது: உலகின் மிகப் பழமையான ஜனநாயக நாடு இந்தியா. அதன் அரசியலமைப்பை வகுப்பதில் அம்பேத்கர் முக்கிய பங்காற்றி உள்ளார்.
சமூக நலத்திற்கான திட்டங்களை வகுப்பதன் மூலம், பிரதமர் மோடி, அம்பேத்கரின் கண்ணோட்டத்திற்கு வடிவம் கொடுத்துள்ளார். சமூகத்தின் எந்த பிரிவிலும் இருக்கும் கடைசி மனிதன் வரையிலும் முன்னேற்றம் காணச் செய்வதே ஒன்றிய அரசின் நோக்கமாகும். அத்தகைய அந்தியோதயா கொள்கைப்படியே ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. இந்த காலத்தில் போதை பழக்கம் இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கையை பாழாக்கும் மிகப்பெரிய தீயசக்தியாக இருக்கிறது. அத்தகைய போதை பொருட்களை ஒழிக்க ஒன்றிய அரசு வலுவான பல நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.