ஊட்டி : ஊட்டி - கோத்தகிரி சாலையில் அமைந்துள்ள கோடப்பமந்து நீர் தேக்கம் பராமரிப்பின்றி காட்சியளிக்கிறது. ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. நகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பார்சன்ஸ்வேலி அணை விளங்கி வருகிறது. இந்த அணையில் இருந்து ஊட்டி நகருக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதுதவிர டைகர்ஹில் அணை, மார்லிமந்து அணை, கோரிசோலை, லோயர் தொட்டபெட்டா, அப்பர் தொட்டபெட்டா, கோடப்பமந்து உள்ளிட்ட நீர்தேக்கங்கள் உள்ளன.
இந்நிலையில் கடந்த ஓராண்டிற்கு முன் பார்சன்ஸ்வேலி அணையில் இருந்து மூன்றாவது குடிநீர் திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக கோடப்பமந்து நீர்தேக்கத்தில் இருந்து தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. இதனால் இந்த நீர்தேக்கம் பராமரிப்பின்றி காட்சியளிக்கிறது. குறிப்பாக நீர் தேக்க தடுப்புகளில் இருந்து தண்ணீர் கசிந்து வெளியேறி வருகிறது. நீர்தேக்கத்தை சுற்றிலும் முட்புதர்கள் வளர்ந்துள்ளன. இதுதவிர நீர்தேக்கத்திற்குள்ளும் செடி கொடிகள் ஆக்கிரமித்து அசுத்தமாக உள்ளது. எனவே இந்த நீர்தேக்கத்தை பராமரிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.