×

வலங்கைமான், சுற்று வட்டார பகுதிகளில் கனமழையால் சுள்ளன் ஆறு நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி

வலங்கைமான்: வலங்கைமான் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையால் சுள்ளன் ஆறு நிரம்பியதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுள்ளன் ஆறானது பொய்கை ஆறு என்ற பெயரோடு தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா, அகரமாங்குடி அருகே புரசக்குடி என்ற பகுதியில் சிறு வடிவாய்காலாக தோன்றி திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த நரசிங்கமங்கலம் பகுதியில் சுமார் நாற்பத்தி ஐந்து மீட்டர் அகலத்தில் வெட்டாற்றில் முடிவடைகிறது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்போது காவிரியின் கிளை நதிகளோடு நேரடியாக இதுவரை இணைப்பு எதுவும் இல்லாத சுள்ளன் ஆற்றிற்கு பாசனத்திற்கு தண்ணீர் வருவது இல்லை. டெல்டா மாவட்டங்களில் காவேரி கோட்டத்தின்கீழ் உள்ள குடமுருட்டி ஆறு, வெண்ணாறு கோட்டத்தின்கீழ் உள்ள வெட்டாறு ஆகியவற்றில் அதிகமாக நீர் வருகின்றபோது பாசனத்திற்கு போக மீதமுள்ள உபரிநீர் சுள்ளான் ஆற்றை நிரப்பும். அல்லது மழைக்காலங்களில் தேவைக்கு அதிகமான உபரி நீர் விவசாயிகளால் விளை நிலங்களில் இருந்து வெளியேற்றும் போது சுள்ளன் ஆறு நிரம்பும்.

சுள்ளன் ஆற்றில் பாபநாசம் ஒன்றியத்தில் புரசக்குடி, நாவலடி, ஓலப்பச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள ரெகுலேட்டர்களும் வலங்கைமான் ஒன்றியத்திற்கு உட்பட்ட அவிச்சாக்குடி, ஆவூர், குளக்குடி, நரசிங்கமங்கலம் உள்ளிட்ட ரெகுலேட்டர்கள் என 7 ரெகுலேட்டர்கள் பாசனத்திற்காக அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அகரமாங்குடி, அவிச்சாகுடி, ஆவூர்-சாளுவம்பேட்டை, கோவிந்தகுடி, வீராணம், மேலநல்லம்பூர், கீழ நல்லம்பூர், குளக்குடி, தொழுவூர், நரசிங்கமங்கலம் காங்கேயநகரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இப்பகுதியில் ஒரு சில விவசாயிகள் மட்டும் கடந்த சில ஆண்டுகாளக மின் மோட்டார்கள் மூலம் மிக மிக குறைந்த அளவே விவசாயம் செய்து வருகின்றனர். போதிய மழைபெய்யாததன் காரணமாக கடந்த எட்டு ஆண்டுகளாக மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படதா நிலையில் கடந்த ஆண்டைப்போன்று இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதியும், கல்லணை ஜூன் 16ம் தேதியும் திறக்கப்பட்டது. அதனையடுத்து இந்த ஆண்டு டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொண்டனர்.

இருப்பினும் ஏனைய பாசன ஆறுகளில் தண்ணீர் வரும் நிலையில் அவற்றுடன் நேரடி தொடர்பு ஏற்படாத சுள்ளன் ஆறு தண்ணீர் இன்றி வரண்டு காணப்படுகின்றது. மேட்டூர் அணை திறப்பால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வரும் நிலையில் அதே டெல்டா மாவட்டங்களில் சுள்ளன் ஆறு விவசாயிகள் மட்டும் சாகுபடி மேற்கொள்ள முடியாமல் வழக்கம்போல் வடகிழக்கு பருவமழைக்காகவும் உபரி நீருக்காவும் காத்திருந்தனர். இந்நிலையில் மேட்டூர் அணை திறக்கப்பட்டு நான்கு மாதங்கள் ஆன நிலையில் பாசனத்திற்கு போதிய தண்ணீர் இன்றி காணப்பட்ட சுள்ளன் ஆறு கடந்த சில தினங்களாக வலங்கைமான் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் விளை நிலங்களில் இருந்து உபரி நீர் வடிய விடப்படுகின்றது. அதனையடுத்து சுள்ளன் ஆறு நிரம்பியதால் சுள்ளன் ஆறு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Valkyman , Farmers
× RELATED வலங்கைமான் ஒன்றியத்தில் ரூ.12...