திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் நாளை தொடங்குகிறது. பிரமோற்சவம் தொடக்கத்தையொட்டி கருடாழ்வார் கொடியேற்றப்படுகிறது. அதாவது கருட கொடி ஏற்றப்படுவது முக்கோடி தேவதைகளை பிரமோற்சவத்திற்கு அழைப்பதற்காக செய்யப்படுகிறது. ருத்விக்குகள் வேத மந்திரங்கள் ஓத கொடி மரத்தைச் சுற்றி தர்பை பாயை தர்பை கயிறால் கட்டப்படுகிறது. சிவ தர்பை மற்றும் விஷ்ணு தர்பை என இரண்டு வகையான தர்பைகள் உள்ளன. திருமலையில் விஷ்ணு தர்பை பயன்படுத்தப்படுகிறது.
இந்த தர்பை பாய், கயிறு தயாரிக்கும் பணியில், தேவஸ்தான வனத்துறையினர் ஈடுபட்டனர். சித்தூர் மாவட்டம் வடமாலை பேட்டை சுற்றியுள்ள செல்லூர் பழைய கால்வாயில் வளரும் தர்பையை வனத்துறையினர் சேகரித்து குறைந்த வெயிலில் ஒரு வாரம் உலர விட்டு முழுமையாக சுத்தம் செய்து பாய் மற்றும் கயிறாக தயார் செய்யும் பணியில் கடந்த 10 நாட்களாக ஈடுபட்டனர். கொடி ஏற்றுவதற்கு 5.5 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலம் கொண்ட பாய் மற்றும் 175 அடி கயிறு தேவை. எனினும், இம்முறை வனத்துறையினர் 7 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலம் கொண்ட பாய் மற்றும் 211 அடி நீளமுள்ள தர்பை கயிற்றை வனத்துறையினர் தயார் செய்தனர்.
இந்த தர்பை பாய், கயிற்றை வராஹா சுவாமி பக்தர்கள் ஓய்வறை அருகே உள்ள தேவஸ்தான வனத்துறை அலுவலகத்தில் இருந்து டிஎப்ஓ சீனிவாஸ் மற்றும் வனத்துறையினர் ஊர்வலமாக கோயிலுக்கு நேற்று கொண்டு வந்து வழங்கினர். இதில் விஜிலென்ஸ் அதிகாரி பாலிரெட்டி, வனச்சரகர் பிரபாகர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். வனத்துறையினர் வழங்கிய தர்பை பாய், கயிறு ரங்கநாதர் மண்டலத்தில் பெரிய சேஷ வாகனத்தில் மீது வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.