மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள 70 கடைகளை அகற்றுமாறு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடைகளை ஒரு மாதத்திற்க்குள் அகற்ற வேண்டும் என கோயில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 2018-ல் மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் வீர விசுந்தராயர் மண்டபம், கடைகள் எரிந்து சேதமாகின. கடைகளில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்துக்கு காரணம் என்பதால் அப்போதே நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் கடை உரிமையாளர்கள் கடைகளை காலி செய்ய கால அவகாசம் கேட்டு மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். மேலும் தங்களுக்கு மாற்று இடம் தந்தால் உடனடியாக காலி செய்வதாகவும் கூறினர்.
கோயில் நிர்வாகத்தின் நோட்டீஸை எதிர்த்து கடை உரிமையாளர்கள் உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். கடைகள் அதே பகுதியில் செயல்பட நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தது. கோயில் நிர்வாகம் சார்பில் தொடரப்பட்ட மேல் முறையிட்டு வழக்கில் கடைகள் அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் மதுரை இணை ஆணையர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கோயிலில் உள்ள பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் 70 கடைகளை ஒரு மாதத்திற்குள் அகற்ற வேண்டும் என கோயில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.