தண்டையார்பேட்டை: மண்ணடி, ராமசாமி தெருவை சேர்ந்தவர் பிரபா (42). இவரது மகளுக்கு, அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிராபாவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர், ‘உங்கள் மகளின் திருணம் பிரச்னையின்றி நடைபெற எனக்கு ரூ.10 லட்சம் தர வேண்டும். மறுத்தால், மாப்பிள்ளை வீட்டாரிடம் உங்கள் மகளை பற்றி தவறாக சித்தரித்து, திருமணத்தை நிறுத்தி விடுவேன்,’ என்று மிரட்டியுள்ளார். இதுகுறித்து பிரபா, முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், பணம் கேட்டு மிரட்டியவரின் தொலைபேசி எண்ணை ஆய்வு செய்தபோது, பிராட்வேயில் உள்ள தொலைபேசி பூத் எண், என தெரிய வந்தது. அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில், பணம் கேட்டு மிரட்டிய நபர், பிராட்வே, பிடாரியார் கோயில் தெருவை சேர்ந்த பாலசாமி (40) என தெரிய வந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர். விசாரணையில், மணி என்பவர் கொடுத்த ஆலோசனையின்பேரில், பிரபாவை மிரட்டியது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள மணியை தேடி வருகின்றனர்.