சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கூடங்குளம் அணுஉலை இயங்கும் அதே வளாகத்திற்குள் மேலும் ஒரு அணுக்கழிவு மையத்தை அமைத்துக் கொள்ள ஒன்றிய அரசு அனுமதி வழங்கியிருப்பது மிகவும் ஆபத்தான ஒரு முடிவு. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். ஒன்றிய அரசு மக்களின் பாதுகாப்பைப் பொருட்படுத்தாமல், ‘வளர்ச்சி’ எனும் பெயரில் இத்தகைய ஆபத்தான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சியைக் கைவிட வேண்டும். அணுக்கழிவைப் பாதுகாப்பாக புதைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதுவரை தற்போதைய அணுஉலைகளை இயக்குவதை நிறுத்திவைக்க வேண்டும். தமிழக அரசும் இதை வலியுறுத்த கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.