சென்னை: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்கள் நவராத்திரி மற்றும் தீபாவளி 2021 சிறப்பு விற்பனை கண்காட்சி, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் கடந்த 1ம் தேதி தொடங்கப்பட்டது. இதில், 122 மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்களின் உற்பத்தி பொருட்களை விற்பனைக்கு வைத்துள்ளன. அதன்படி பட்டு, பருத்தி ஆடைகள், கைவினை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், கொலு பொம்மைகள், மரச்சிற்பங்கள், மூலிகை பொருட்கள் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் இந்த கண்காட்சியை பார்வையிட்டு தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர். கடந்த 1ம் தேதி முதல் 3ம் தேதி வரையில் மட்டுமே 5 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் இங்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி பயனடையுமாறு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.