×

தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் குடிநீர், சுகாதாரமான கழிவறை வசதிகள் உள்ளதா?: ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் குடிநீர், சுகாதாரமான கழிவறை வசதிகள் உள்ளதா? என ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. பெரம்பூரை சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார். அதில், பெரம்பூரில் உள்ள ஸ்பெக்ட்ரம் மால்களில் உள்ள தியேட்டர்களில் குடிநீர், குளிர்பானம் மற்றும் உணவு பொருட்கள்  எம்.ஆர்.பி. விலையை விட அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், வெளியில் கிடைக்கும் எம்.ஆர்.பி.க்கும், தியேட்டர்களில் உள்ள எம்.ஆர்.பி.க்கும் வித்யாசம் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன்பாக விசாரணைக்கு வந்த போது, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக விற்கப்படுவது சட்டப்படி குற்றம் என்றும், இதன் மூலம் ஒவ்வொரு நாளும் பல லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில், பொருட்களை விற்பதற்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், அதை மீறி விற்கப்பட்டால் நடவடிக்கை எடுத்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 2020 - 21ம் ஆண்டு ஜூலை மாதம் வரை 12 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், திரையரங்குகளில் கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மேலும் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் குடிநீர், சுகாதாரமான கழிவறை வசதிகள் உள்ளதா? என ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். தொடர்ந்து உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவது தொடர்பாக புகார் வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags : Tamil Nadu ,TN , Tamil Nadu, Theater, Drinking Water, Toilet, iCord
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...