×

க்ரைம் நியூஸ்

போக்சோவில் பானிபூரி வியாபாரி கைது: ­­­­­­விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, தனது தாயாரிடம் கோபித்துக் கொண்டு சென்னை மெரினா கடற்கரை வந்தபோது, அவளை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த, திரிசூலம் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த பானிபூரி வியாபாரி ஆறுமுகத்தை (22), போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். 604 மதுபாட்டில்கள் பறிமுதல்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை பயன்படுத்தி, பழவந்தாங்கல் மூவரசம்பட்டு பிரதான சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மதுபாட்டில்களை பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்ற சிதம்பரத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (28), சிவகங்கையை சேர்ந்த பிரசாந்த் (24) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து, 604 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மாணவன் உடல் கரை ஒதுங்கியது: தரமணியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கோகுல் (18), நேற்று முன்தினம் சக மாணவர்களுடன் மெரினா கடலில் குளித்தபோது, ராட்சத அலையில் சிக்கி மாயமானார். அவரை நீண்ட நேரம் தேடியும் இடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று காலை அண்ணா சமாதி பின்புறம் அவரது உடல் கரை ஒதுங்கியது.
6 வழிப்பறி கொள்ளையர்கள் கைது: வியாசர்பாடி குட் ஷெட் பகுதிக்கு வரும் சரக்கு லாரி டிரைவர்களை கத்தி முனையில் மிரட்டி பணம் பறித்து வந்த, பிராட்வே பகுதியை சேர்ந்த ராஜா (44), காவாங்கரையை சேர்ந்த முகேஷ் (30), பெரம்பூரை சேர்ந்த ஹரிஹரன் (21), ஆகாஷ் (19), வியாசர்பாடியை சேர்ந்த சாரதி (25), சிக்கந்தர் பாஷா (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
லாரி மோதி வாலிபர் பலி: திருநெல்வேலி பாளையங்கோட்டையை சேர்ந்த நைஜல் (24), ஊரப்பாக்கத்தில் தங்கி வேலை தேடி வந்தார். இவர், நேற்று விமான நிலையம் அருகே பைக்கில் சென்றபோது, டிப்பர் லாரி மோதி இறந்தார்.
வாலிபரிடம் லேப்டாப் திருட்டு: நங்கநல்லூர் 24வது தெருவை சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியர் ஆதித்யா (22), பெங்களுருவில் இருந்து நேற்று அதிகாலை பேருந்தில் கோயம்பேடு வந்தபோது, அவரது பையில் இருந்த லேப்டாப், செல்போன், ஏடிஎம் கார்டு உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
கூவம் ஆற்றில் வாலிபர் சடலம்: சிந்தாதிரிப்பேட்டை படவேட்டம்மன் கோயில் தெருவை சேர்ந்த பிரேம்குமார் (29), அதே பகுதி அம்மா நகர் மேம்பாலத்துக்கு கீழ், கூவம் ஆற்றில் மர்மமான முறையில் சடலமாக மிதந்தார். அவர் தற்ெகாலை செய்தாரா அல்லது கொலையா என போலீசார் விசாரிக்கின்றனர்.
வாகனங்கள் அடித்து உடைப்பு: பெரவள்ளூர் ஜம்புலிங்கம் மெயின் ரோட்டை சேர்ந்த சூர்யா (21), நேற்று முன்தினம் இரவு போதையில் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ, மினி வேன், ஆகியவற்றின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார். இதுகுறித்த புகாரின்பேரில் பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாலிபருக்கு சரமாரி வெட்டு: கொடுங்கையூர் எழில் நகர் 9வது தெருவை சேர்ந்த மணிகண்டனை (19), முன்விரோத தகராறில் நேற்று முன்தினம் இரவு கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிய, தண்டையார்பேட்டையை சேர்ந்த சதாம்  உசேன் (21), ஆசிப் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான தீபக்கை தேடி  வருகின்றனர்.
செல்போன் பறித்த 2 பேர் கைது: முகப்பேர் பகுதியை சேர்ந்த நந்தகோபால் (63), தனது மனைவி தனலட்சுமியுடன் (56), கோயம்பேடு மேம்பாலம் அருகே பைக்கில் சென்றபோது, அவர்களை தாக்கி செல்போனை பறித்து சென்ற, மதுரவாயல் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த கமலேஷ் (20), நெற்குன்றம் தனலட்சுமி நகரை சேர்ந்த தீனா (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.    



Tags : Crime , Pokcho, convicted, arrested, robbed, murdered
× RELATED வேலூர் சைபர் கிரைம் போலீஸ்...