சென்னை: தீபாவளி பண்டிகையொட்டி, கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய 20 சதவீதம் தள்ளுபடி வழங்கிய நிலையில், தற்போது அது 30 சதவீதமாக உயர்த்தி இருப்பதாக கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக உயர் அதிகாரி தெரிவித்தார். தமிழக அரசின் கைத்தறி நிறுவனமான கோ- ஆப்டெக்ஸ் நாடு முழுவதும் 167 விற்பனை நிலையங்களாக செயல்பட்டு வருகிறது. கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் மாநிலம் முழுவதும் உள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட ஜவுளிகள் வாங்கி விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனை நிலையங்களில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி விற்பனையாக சிறப்பு விற்பனை மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் அனைத்து பொருட்களுக்கும் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்தாண்டு, கைத்தறி சில்க் வகை பொருட்களுக்கு ரூ.1000 வரை 30 சதவீதமும், ரூ.1000க்கு மேல் வாங்கும் பொருட்களுக்கு 20 சதவீதமும், ஏற்றுமதி வகை உட்பட கைத்தறி காட்டன் வகை பொருட்களுக்கு ரூ.500 வரை 30 சதவீதமும், ரூ.501க்கு மேல் வாங்கும் பொருட்களுக்கு 20 சதவீதமும், விசைத்தறி வகை பொருட்கள் அனைத்து வகையான விலையில் 20 சதவீதம் வரையும், அனைத்து கைத்தறி தள்ளுபடி இல்லா பொருட்கள் அனைத்து வகையிலும் 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கடந்தாண்டில் தீபாவளி பண்டிகையொட்டி 30 சதவீதம் தள்ளுபடி வழங்கி வந்ததை தற்போது கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் 20 சதவீதமாக குறைத்த நிலையில் ரூ.200 கோடி வருவாய் இலக்கை அடைவது சிரமம் என்று கோ ஆப்டெக்ஸ் ஊழியர்கள் தெரிவித்தனர். அவர்கள் கூறியபடி, கடந்த 15ம் தேதி முதல் கடந்த 23ம் தேதி வரை ரூ.3.33 கோடி மட்டுமே விற்பனை ஆகியுள்ளது. இது விற்பனை இலக்கில் 1.67 சதவீதம் மட்டுமே ஆகும். எனவே வருவாய் இலக்கை அடைய தள்ளுபடி 30 சதவீதம் வழங்க வேண்டும் என்று நேற்று உயர் அதிகாரிகள் நடந்த கூட்டத்தில் ஊழியர்கள் தெரிவித்தனர். இதையேற்று தீபாவளி பண்டிகை தள்ளுபடி 30 சதவீதம் வழங்கலாம் என்று நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது என்று ஊழியர்கள் சிலர் தெரிவித்தனர்.