திருவள்ளுர்: தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு பல்வேறு இடங்களில் மக்களை கவரும் வகையில் பரிசு பொருட்களை வழங்கி விழிப்புணர்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திருவள்ளுர் மாவட்டத்தில் 3ம் கட்டமாக 1 லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 913 சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி ஒரே நாளில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 100 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
இந்நிலையில் பொதுமக்களை கவரும் வகையில் திருவள்ளூர் ஒன்றியம், வெள்ளியூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் தலா ஒரு கிராம் தங்க நாணயம் என 6 பேருக்கு வழங்கப்படும் என அறிவிப்பு செய்திருந்தது. இதனை தொடர்ந்து ஒரே நாளில் அதிகளவில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வந்தனர். வெள்ளியூர் ஊராட்சியில் 60 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளனர்.
இதில் குலுக்கல் முறையில் 6 நபர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு தலா 1 கிராம் தங்க நாணயத்தை ஊராட்சி துணை தலைவர் டி.முரளி கிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் டி.எம்.எஸ் வேலு, ஊராட்சி தலைவர் பப்பி முனுசாமி ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் யுவராஜ், மருத்துவர் சரவணன் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.