சின்னாளபட்டி : கன்னிவாடி பேரூராட்சிக்குட்பட்ட 1வது வார்டு ஒட்டகோவில்பட்டி (டி.புதுப்பட்டி) காலனி. இப்பகுதி மக்களுக்காக ரெட்டியார்சத்திரம் சாலையில் பொது சுகாதார வளாகம் இயங்கி வந்தது. இக்கட்டிடம் சேதமடைந்ததால், அருகிலேயே புதிய சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் உரிய பராமரிப்பில்லாததால், சுகாதார வளாகத்தின் செப்டிக் டேங்க் நிரம்பி வழிகிறது. செப்டிங் டேங்க் கழிவுநீர் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருவதுடன், சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது.
மேலும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி வருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் கொசுக்கடிக்கும் ஆளாக்கி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சுகன்யா என்பவர் கூறுகையில், ‘20 நாட்களுக்கு மேலாக கழிவுநீர் வெளியேறி செல்கிறது. சம்பந்தப்பட்ட அலுவலரிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை’ என்றார். ஒட்டக்கோவில்பட்டியைச் சேர்ந்த முனியப்பன் கூறுகையில், ‘செப்டிங் டேங்கிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதுடன், இப்பகுதிமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.