புதுடெல்லி: அமெரிக்காவில் நடக்கும் குவாட் உச்சி மாநாடு, ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி கடந்த புதன்கிழமை காலை டெல்லியில் இருந்து தனி விமானத்தில் அமெரிக்கா சென்றார். அங்கு, அமெரிக்கா வாழ் இந்தியர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். பின்னர், அவர்களுடன் நடந்த நிகழ்ச்சியில் மோடி பங்கேற்றார். இந்நிலையில், டெல்லியில் இருந்து விமானத்தில் சென்ற போதும், அரசு கோப்புகளை மோடி பார்த்தார். அந்த படத்தையும் டிவிட்டரில் வெளியிட்டார். இதற்கு லைக் கொடுத்துள்ள ரயில்வே இணையமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ‘நாட்டுக்காக ஓய்வறியாது உழைக்கும் தலைவர்’ என்று பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், மோடி படத்துக்கு அருகில் லால்பகதூர் சாஸ்திரி விமான பயணத்தில் கோப்புகளை பார்க்கும் படத்தை வெளியிட்டு, ‘இரு தலைவர்களும் கடமையே கருத்தாக கொண்டவர்கள்,’ என்று கபில் மிஸ்ரா புகழ்ந்துள்ளார்.
இதே படத்தை ‘லால்பகதூர் சாஸ்திரியின் பேரனும், காங்கிரசை சேர்ந்தவருமான விபாகர் சாஸ்திரி வெளியிட்டு ‘எனது தாத்தா கூட விமானத்தில் பறக்கும்போது கோப்புகளை பார்த்துள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு சிலர், ‘முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படத்தை வெளியிட்டு, ‘ராஜீவ் காந்தி 1980ம் ஆண்டே விமானத்தில் பறந்த போது லேப்டாப்பிலேயே கோப்புகளை பார்த்துள்ளார். மோடி இன்னும் கோப்புகளையே கையாள்கிறார்,’ என்று குறிப்பிட்டுள்ளனர். இதே போல், முன்னாள் பிரதமர்கள் பி.வி.நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் ஆகியோர் விமானத்தில் கோப்புகளை பார்த்த புகைப்படங்களை காங்கிரசார் வெளியிட்டுள்ளனர்.