×

விருந்தினர் மாளிகைக்கு அழைத்து சென்று கொடூரம்: சட்டப் பல்கலை மாணவி பாலியல் பலாத்காரம்; குஜராத்தின் பிரபல ஆடிட்டர், தொழிலதிபர் தலைமறைவு

வதோதரா: குஜராத்தில் விருந்தினர் மாளிகைக்கு அழைத்து சென்று சட்டப் பல்கலை மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவ்விவகாரத்தில் தலைமறைவாக உள்ள ஆடிட்டர் மற்றும் தொழிலதிபரை போலீசார் தேடி வருகின்றனர். குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த பிரபல பட்டய கணக்காளர் (ஆடிட்டர்) அசோக் ஜெயின் (60) மற்றும் அவரது கூட்டு நிறுவன தொழிலதிபர் ராஜூ பட் ஆகியோர் மீது சட்டப் பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார புகார் அளித்துள்ளார். அதையடுத்து, அவர்கள் இருவர் மீதும் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வரும் நிலையில், மேற்கண்ட இருவரும் தலைமறைவாக உள்ளனர். இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில், அரியானாவை சேர்ந்த மாணவி ஒருவர், வதோதரா நகரத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பைத் தொடர இருந்தார்.

அதற்காக கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு குற்றம்சாட்டப்பட்ட அசோக் ஜெயின் என்பவரின் நிறுவனத்தின் ‘இன்டர்ன்ஷிப்’பில் சேர்ந்தார். இந்த நிறுவனத்திற்கு வந்து படிப்பதற்கு மாணவிக்கு சிரமம் ஏற்பட்டதால், அவருக்கு வசதியாக திவாலிபுரா பகுதியில் உள்ள ஒரு பிளாட்டை சோக் ஜெயின் ஏற்பாடு செய்து கொடுத்தார். அதன்படி, அந்த மாணவியும் கல்வி நிறுவனத்திற்கு சென்று படித்து வந்தார். சில நாட்கள் கழித்து, தனது நண்பர் ஒருவரை அறிமுகப்படுத்தி வைப்பதாக கூறி, வாஸ்னா சாலையில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு மாணவியை அசோக் ஜெயின் அழைத்துச் சென்றார். அங்கு அவரது தொழில் நிறுவன முதலீட்டாளர் ராஜூ பட் இருந்தார்.

அன்றிரவு, மதுபோதையில் இருந்த அசோக் ஜெயின், மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தார். அதிர்ச்சியடைந்த அவர், அங்கிருந்து தப்பிக்க முயன்ற போது அவரை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் தொழில் ரீதியான நண்பரான ராஜூ பட்டும், அந்த மாணவியை பாலியல் உறவு மேற்கொள்ள முயன்றார். ஆனால், அந்த மாணவி கடுமையாக எதிர்க்கவே, இருவரும் சேர்ந்து மாணவியை தாக்கியுள்ளனர். அதன்பின், ராஜூ பட்டும் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அந்த மாணவியின் நிர்வாண புகைப்படங்களை எடுத்துள்ளனர். அடுத்த நாள் காலை, அந்த மாணவியை அவரது பிளாட்டில் இறக்கிவிட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

தான் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான விவகாரத்தை, போலீசில் தெரிவிப்பதாக அசோக் ஜெயினிடம் மாணவி கூறினார். அதற்கு அவர், ‘எனது நண்பர்களுக்கும், சமூக வலைதளங்களிலும் உன்னுடைய நிர்வாண படங்களை அனுப்பி வைரலாக்குவேன்’ என்று கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த மாணவி, தற்போது போலீசில் புகார் அளித்துள்ளார். குற்றம்சாட்டப்பட்ட அசோக் ஜெயின், ராஜூ பட் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் தலைமறைவாக இருப்பதால், அவர்களை தேடி வருகிறோம்’ என்றார்.

Tags : Gujarat , Guest House, Law University, Student Rape, Famous Auditor of Gujarat
× RELATED பாஜவுக்கு வாக்களிக்க மக்களுக்கு...