சென்னை: வடசென்னை அனல் மின்நிலையத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டது. தற்போது அவை சரிசெய்யப்பட்டு, நேற்று முதல் மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி துவங்கியது. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின்நிலையத்தின் முதலாவது நிலையில் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட், இரண்டாவது நிலையில் 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன் முதலாவது நிலையில் உள்ள முதல் அலகில் இருக்கும் கொதிகலன் குழாயில் கசிவு ஏற்பட்டது. இதனால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்போது அந்த கொதிகலன் குழாய்கள் சரிசெய்யப்பட்டு, நேற்று காலை முதல் மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி துவங்கியது என அனல் மின்நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.