சிவகாசி: சிவகாசி நகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகளால் வாறுகால் கழிவு நீர் செல்ல வழியின்றி தேங்கி சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருகிறது. மழைக்காலங்களில் மழைநீருடன் வாறுகால் கழிவுநீரும் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் ஆபத்து இருந்தது. இந்நிலையில் சிவகாசி நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி உத்தரவின் பேரில், நகரில் உள்ள முக்கிய சாலைகளில் உள்ள வாறுகால் ஆக்கிரமிப்புகளை நகராட்சி பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். காரனேசன் பஸ் நிறுத்தம், பழைய விருதுநகர் சாலை, ஓடை தெரு போன்ற இடங்களில் உள்ள வாறுகால் ஆக்கிரமிப்புகள் அகற்ற பட்டன. இதே போல் சிவகாசி பஜார் பகுதியில் உள்ள கீழ ரதவீதி, மேல ரதவீதி, தெற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி பகுதிகளில் உள்ள ஆக்கரிமிப்புகளும் அகற்றப்பட்டன.
சிவகாசி பைபாஸ் சாலை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் தாங்களே ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள காலஅவகாசம் கோரினர். இதை தொடா்ந்து அங்கு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் காலஅவகாசம் முடிந்தும் அகற்றப்படாமல் இருந்த வாறுகால் ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டது. நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, சுகாதார அலுவலர் பேச்சிமுத்து, சுகாதார ஆய்வாளர், சுகாதார மேற்பார்வையாளர் முத்துராஜ் ஆகியோர் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.