சோளிங்கர்: மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவாக நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை தலைமையிட வளாகத்தில் கலைஞர் தல விருட்சம் நடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகலிங்க மரக்கன்றை நட்டுத் தொடங்கி வைத்தார். அதன்படி தமிழகம் முழுவதும் கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில் ஒரு லட்சம் தல விருட்சங்கள் நடுவதற்கான பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பெரிய மலையடிவாரத்தில் உள்ள ரோப் கார் அமையும் இடத்தில் கோயில் உதவி ஆணையர் ஜெயா மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். இக்கோயிலின் ஸ்தல விருட்சமாக விளங்கும் பாரிஜாதம் மற்றும் தேக்கு, புங்கை, பூவரசம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை கோயில் கண்காணிப்பாளர் விஜயன் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் நட்டனர்.