திருச்சுழி: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே க.விலக்கு பகுதியில் டீக்கடை நடத்தி வருபவர் குமரேசன் (65). இவரது மனைவி விஜயா. டீக்கடைக்கு பின்புறம் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் வல்லராம்நாடை சேர்ந்தவர் கார்த்திக் (28). இவர் இன்று அதிகாலை ஜல்லி கற்கள் ஏற்றுவதற்காக ரெட்டியபட்டி பகுதிக்கு டிப்பர் லாரியில் வந்தார். அப்போது சற்று கண் அயர்ந்துள்ளார். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் இருந்த குமரேசனின் டீக்கடைக்குள் புகுந்தது.
வீட்டில் தூங்கி கொண்டிருந்த குமரேசன் உட்பட 5 பேரும் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். 5 பேரும் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். இதுகுறித்து ம.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.