×

பாஜக ஹெலிகாப்டர் சகோதரர்கள் வழக்கு : கணேசனின் மனைவி அகிலாண்டம் பெயரில் மலேசியா, துபாயில் ரூ.551 கோடி முதலீடு

மதுரை: பாஜக கட்சியை சேர்ந்த ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீதான நிதி நிறுவன மோசடி வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த பாஜ பிரமுகர்கள் கணேசன் மற்றும் சுவாமிநாதன். இருவரும் ‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’ என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் நிதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைதாகியுள்ள கணேசன் மனைவி  அகிலாண்டம் மற்றும் நிதி நிறுவன அலுவலக பணியாளர் வெங்கடேசன் ஆகியோர் ஐகோர்ட் கிளையில் ஜாமீன் கோரி மனு செய்தனர்.

இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், ஆசன வழக்கறிஞர் ‘‘மனுதாரர்கள் பல கோடி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். முறைகேட்டில் ஈடுபட்ட பணத்தை கொண்டு கணேசனின் மனைவி அகிலாண்டம் பெயரில் மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் முதலீடு செய்துள்ளனர். சுமார் ரூ.551 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ள நிறுவனங்களில் அகிலாண்டம் நிர்வாகியாக உள்ளார். எனவே இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு, விசாரணை முக்கிய கட்டத்தில் உள்ளது. எனவே ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கும் என்பதால் ஜாமீன் வழங்க கூடாது ,’’ என்று வாதிட்டார். இதைத் தொடர்ந்து சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்த நீதிபதி,‘‘அகிலாண்டத்தின் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுகிறது. மேலும், அலுவலக உதவியாளர் வெங்கடேசன் ஜாமீன் மனு அனுமதிக்கப்படுகிறது,’’ என்றார்.


Tags : BJP ,Malaysia, Dubai ,Ganesan ,Akilandam , ஹெலிகாப்டர் சகோதரர்கள்
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...