புதுடெல்லி: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் லக்னோவில் நாளை நடக்க உள்ளது. இக்கூட்டத்தில் உணவுகளை வீடுகளுக்கு டெலிவரி செய்யும் ஆப்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே இந்த ஆப்கள் ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் தான் உள்ளன. ஆனால், உணவுகளை வழங்கும் ஓட்டல்கள் வாடிக்கையாளர்களிடம் ஜிஎஸ்டி வசூலிப்பதால், டெலிவரி ஆப்கள் தனியாக அரசுக்கு ஜிஎஸ்டி செலுத்த வேண்டியதில்லை. ஆனால், நடுத்தர ஓட்டல்கள், உணவு டெலிவரி ஆப்கள் மூலமாக சப்ளை செய்யப்படும் உணவுகளுக்கு முறையாக ஜிஎஸ்டி செலுத்துவதில்லை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கடந்த 2 ஆண்டில் அரசுக்கு ரூ.2000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.இதை நிவர்த்தி செய்ய இனி ஆன்லைன் உணவு டெலிவரி ஆப்களும், ஓட்டல்களாக கருதப்பட்டு, அவர்கள் டெலிவரி செய்யும் உணவுகளுக்கான ஜிஎஸ்டி வரியை அரசுக்கு செலுத்தும் படி மாற்றப்பட உள்ளது. ஏற்கனவே உணவுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதால் இந்த மாற்றம் காரணமாக ஓட்டல் உணவுகளின் விலை உயராது என அரசு தரப்பில் கூறப்படுகிறது. இந்த உணவு சப்ளை நிறுவனங்கள் தங்கள் பில் முறைகளை கையாளும் சாப்ட்வேர்களில் மாற்றங்களை கொண்டு வரவும் ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை செய்ய இருக்கிறது.