×

ராஜஸ்தானில் நீட் தேர்வில் நூதன மோசடி: மாணவி உட்பட 8 பேர் கைது

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நீட் தேர்வில் மோசடி செய்த மாணவியையும் அவருக்கு உதவியவர்கள் என மொத்தம் 8 பேரை போலீசார் கைது செய்தனர். ஜெய்ப்பூரில் தேர்வு எழுதிய மாணவி தினேஷ்குமாரி என்பவருக்கு உடந்தையாக தேர்வு மைய கண்காணிப்பாளராக இருந்த ராம்சிங், தேர்வு மைய நிர்வாக பொறுப்பில் இருந்த முகேஷ் ஆகியோர் வினாத்தாளை போட்டோ எடுத்து அதனை வாட்ஸ்அப் வழியாக ஜெய்ப்பூரில் சித்ரகூத் பகுதியில் உள்ள அபார்ட்மென்டில் இருந்த இருவருக்கு அனுப்பியுள்ளனர்.

அவர்கள் அதை சிஹாரில் உள்ள சிலருக்கு அனுப்பி அதற்கான விடைகளை பெற்று அவற்றை ராம்சிங்கிற்கு அனுப்பி அதன் மூலம் தினேஷ்குமாரி சரியான விடைகளை எழுதியுள்ளார். இந்த மோசடிக்கு 30 லட்சம் ரூபாய் விலைபேசி அதில் 10 லட்சத்தை தினேஷ்குமாரி உறவினர் தயாராக வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 18 வயதான மாணவி தினேஷ்குமாரி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஷிஹாரில் இருந்து விடைகளை அனுப்பி கொடுத்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Rajasthan , NEET
× RELATED மோடியின் வெறுப்பு பேச்சு தேர்தல் ஆணையம் விசாரணை