×

கோவையில் படித்துவந்த கேரள மாணவி தற்கொலை: பேராசிரியர் காரணம் என உறவினர்கள் புகார்

கோவை: கோவை எட்டிமடையில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் படித்துவந்த ஆராய்ச்சி மாணவி பாலக்காடு அருகேயுள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள கொல்லக்கோட்டை சேர்ந்த கிருஸ்ணகுமாரி என்பவர் கோவை எட்டிமடை பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் 5ஆம் ஆண்டு ஆராய்ச்சி படிப்பில் படித்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்த கிருஸ்ணகுமாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பாலக்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கிருஸ்ணகுமாரியின் ஆராய்ச்சி படிப்பு தொடர்பாக அவரின் வழிகாட்டியாக இருந்த பேராசிரியர் மனரீதியாக துன்புறுத்தியதாகவும் தனது ஆய்வு கட்டுரையை நிராகரித்ததாக கூறி வீட்டில் உள்ளவர்களிடம் கிருஸ்ணகுமாரி அழுததாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

கட்டுரை நிராகரிக்கப்பட்டால் தற்கொலை செய்து கொள்ளுமாறு வழிகாட்டியாக இருந்த பேராசிரியர் கடுமையாக பேசியதாக உறவினர்களிடம் கிருஸ்ணகுமாரி கூறியதும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக தொடர்ந்து போலீசார் கிருஸ்ணகுமாரியின் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags : Kerala , Student, suicide
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...