பொன்னேரி: மீஞ்சூர் அருகே உள்ள மேட்டுப்பாளையத்தில் ஸ்ரீ ஜோதி சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி- திருவெற்றியூர் நெடுஞ்சாலை ஓரத்தில் சுமார் 65 ஆண்டு கால பழமையான ஸ்ரீஜோதி சித்திவிநாயகர் ஆலயம் உள்ளது. நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிக்காக கடந்த ஆண்டு இக்கோயில் இடிக்கப்பட்டது. இந்நிலையில், பக்தர்களின் காணிக்கை மூலம் கோயில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகத்திற்காக கணபதி ஹோமம், யாக சாலை பூஜைகளுடன் நேற்று அதிகாலை தொடங்கியது.
புதிய பிம்பங்களுக்கு கண் திறத்தல், முதலான அஷ்டாதச கிரியைகளுக்கு பூஜைகள் செய்து, வேதமந்திரங்கள் முழங்க புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஆலய கோபுரம் மேல் உள்ள கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் மூலம் தெளிக்கப்பட்டு நேற்று காலை 7.51 மணிக்கு கும்பாபிஷேகம் விழா சிறப்பாக நடைபெற்றது . இந்த, கும்பாபிஷேகத்தில் மேட்டுப்பாளையம், ஜோதி நகர், இலவம்பேடு, வன்னிபாக்கம், சிறுவாக்கம், அனுப்பம்பட்டு உள்ளிட்ட சுற்றுப்புற கிராமத்தில் இருந்தும் மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர். இந்த விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆலய தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளி கடைபிடித்து பூஜையில் கலந்து கொண்டனர்.