பட்டிவீரன்பட்டி : பெரும்பாறை அருகே காட்டு யானை முகாமிட்டு, பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர். பெரும்பாறை பகுதியில் கேசி பட்டி, கவியக்காடு, அரியமலை, நடுப்பட்டி, சேம்பிலியுத்து, கும்மம்மாள்பட்டி உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இங்குள்ள பட்டா காடுகளில் உள்ள வேலிகளை உடைத்து அடிக்கடி தோட்டங்களில் புகும் காட்டுயானைகள் மலைவாழை, காபி, ஆரஞ்சு, சவ்சவ் உள்ளிட்ட பயிர்களைறை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது. யானை உள்ளிட்ட வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் வராமல் இருக்க சோலார் வேலி, முள்வேலி போன்றவற்றை விவசாயிகள் அமைத்துள்ளனர்.
ஆனால் அதனை எல்லாமல் பொருட்படுத்தாமல் வேலிகளை உடைத்து விட்டு விளைநிலங்களுக்குள் யானைகள் புகுந்து பயிர்கள் சேதப்படுத்துகின்றன. அதேபோல் வனத்துறையினர் தங்களது உயிரை பொருட்படுத்தாமல் யானைகளை விரட்ட புகை மூட்டம் போடுவது, பட்டாசு வெடிப்பது, தீப்பந்தம் காட்டுவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அப்போது மட்டும் வனப்பகுதிக்குள் செல்லும் யானைகள் சில நாட்களிலே மீண்டும் திரும்பி வந்து விடுகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பெரும்பாறை அருகே கவியக்காட்டு பகுதியில் காட்டு யானை ஒன்று முகாமிட்டு பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் விளைநிலங்களுக்கு செல்ல முடியாமல் அச்சமடைந்துள்ளனர். தகவலறிந்ததும் வத்தலக்குண்டு, கன்னிவாடி வனச்சரகத்தினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து காட்டுயானையை பட்டாசு வெடித்து விரட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.