சென்னை: தமிழக சட்டப் பேரவையில் நேற்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை, கைத்தறி, செய்தி மக்கள் தொடர்புத் துறை ஆகிய மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு சங்ககிரி தொகுதி உறுப்பினர் சுந்தர்ராஜன் (அதிமுக) பேசியதாவது: அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. திருமண மண்டபத்தில் திருமணங்களை நடத்தினால், இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற முடியாது என்கின்றனர். மேலும் கஷ்டப்பட்டு நடத்தும் திருமண நேரங்களில் இவை கிடைத்தால் தான் பயனுள்ளதாக இருக்கும்.
அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்: எங்கள் ஆட்சியில் இந்த திட்டத்தை நிறுத்தியதாக ஒரு மாயையை ஏற்படுத்த முயல்கின்றனர். ஏற்கனவே, அதிமுக ஆட்சி காலத்தில் கடந்த 3 ஆண்டு காலமாக தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
சுந்தர்ராஜன்: கொரோனா காலம் என்பதால், அதை அப்போது வழங்க முடியவில்லை.
அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்: அதற்கு முன்பே வழங்கப்படவில்லை.
அமைச்சர் பி.மூர்த்தி: கடந்த மாதம் 17ம் தேதி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இங்கே பேசும்போது, கடந்த ஆட்சியில் தான் போலி ஆவணங்கள் பதிவை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறினார். அது தவறு. போலி ஆவணங்கள் பதிவை தடுக்க 2001ம் ஆண்டே மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. ஆனால், அதை அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக கொண்டு வரவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 1-7-2007ம் ஆண்டு தான் அது அமல்படுத்தப்பட்டது.
அமைச்சர் கீதா ஜீவன்: தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் கடந்த ஆட்சியில், 2019ம் ஆண்டு மார்ச் மாதமே நிறுத்தப்பட்டு விட்டது. மொத்தம் 3 லட்சத்து 34 ஆயிரத்து 913 விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தன. தாலிக்கு வழங்கும் தங்கத்தை 8 கிராமாக உயர்த்தி வழங்குவதாக அறிவித்தார்களே தவிர அதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. இப்போது, இந்த திட்டத்தை செயல்படுத்த முதல்வர் ரூ.232 கோடி நிதி ஒதுக்கித் தந்துள்ளார். இவ்வாறு விவாதம் நடந்தது.