மும்பை: ரூ.100 கோடி மாமூல் வசூல் வழக்கில் முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்கிற்கு எதிராக அமலாக்கத்துறை லுக்அவுட் நோட்டீஸ் அறிவிப்பு வெளிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநில தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே வெடிகுண்டு நிரப்பப்பட்ட கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அப்போதைய போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவர், மகாராஷ்டிரா மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் (தேசியவாத காங்கிரஸ்) அனில் தேஷ்முக் மீது ரூ.100 கோடி மாமூல் பணம் வசூலிக்க சொன்னதாக குற்றம் சாட்டினார். இந்த வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. பாம்பே உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அனில் தேஷ்மக்கின் தனி செயலாளர் மற்றும் தனி உதவியாளரை ஏற்கனவே சிபிஐ கைது செய்தது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் உள்ளிட்ட சிலருக்கு ‘லுக்அவுட்’ நோட்டீஸ் அறிவிப்பை அமலாக்கத்துறை வெளியிட்டுள்ளது. அவரது வீட்டிலும் ஒட்டப்பட்டது. மேலும், விமான நிலையம் உள்ளிட்ட முகமைகளுக்கும் அறிவிக்கை வழங்கப்பட்டது. அதனால், அனில் தேஷ்முக் நாட்டை விட்டு வெளியேற முடியாது. ஏற்கனவே அமலாக்கத்துறை அனில் தேஷ்முக்கை விசாரணைக்கு ஆஜராகுமாறு ஐந்து முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. கடந்த மாதம், உச்ச நீதிமன்றமும் அவருக்கு இடைக்கால நிவாரணம் வழங்க மறுத்துவிட்டது. தற்போது லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டால், விரைவில் அனில் தேஷ்முக் கைது செய்யப்படலாம் என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.