×

என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால், பொதுவெளியில் தூக்கில் தொங்குகிறேன்: மம்தா பேனர்ஜியின் உறவினர் அபிஷேக் பேனர்ஜி ஆவேசப் பேச்சு!!

கொல்கத்தா: ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை முன்பு ஆஜரான மம்தா பேனர்ஜியின் உறவினர் அபிஷேக் பேனர்ஜி, குற்றத்தை நிரூபித்தால் பகிரங்கமாக தூக்கில் தொங்குவேன்என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும் அக்கட்சி எம்பியுமான அபிஷேக் பானர்ஜி, அவரின் மனைவி ருஜிரா பானர்ஜி ஆகியோரை நிலக்கரி ஊழல் வழக்கில் அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பி இருந்தது. மக்களவை உறுப்பினரான அபிஷேக் பேனர்ஜி, திரிணாமுல் காங்கிரசின் தேசிய பொதுச் செயலாளராகவும் உள்ளார்.

இந்த நிலையில் ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை இயக்குநரகத்தில் இன்று அவர் நேரில் ஆஜரானார். டெல்லி செல்வதற்கு முன்பு இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், மேற்கு வங்க தேர்தலில் தோல்வியுற்ற பாஜக பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.  என் மீதான குற்றச்சாட்டில் ஒன்றிய விசாரணை அமைப்பு ஏதாவது ஆதாரத்தை நிரூபித்தால், பொதுவெளியில் தூக்கில் தொங்குகிறேன்’’ என கூறி உள்ளார்.

இதனிடையே திரிணாமுல் காங்கிரசில் இருந்து பாஜகவிற்கு சென்ற சுவேந்து அதிகாரிக்கு மாநில சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். கடந்த 2018ல் திரிணாமுல் காங்கிரஸ் எம்பியாக சுவேந்து அதிகாரி இருந்த போது, அவரது பாதுகாப்பு அதிகாரியான மாநில ஆயுதப் படை போலீஸ் சுப்ரதா சக்ரவர்த்தி தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டுமென சக்ரவர்த்தியின் மனைவி புகார் செய்தார். இது தொடர்பாக, மாநில சிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த வழக்கில் தற்போது பாஜ எம்எல்ஏவாக இருக்கும் சுவேந்து அதிகாரி இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.


Tags : Mamta Banerjee ,Abhishek Banerjee , Mamta Banerjee, cousin, Abhishek Banerjee
× RELATED காவி மயமான தூர்தர்ஷன் லோகோ பாஜவின்...