புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசானது வேலைவாய்ப்புக்கு தீங்கிழைக்கக்கூடியது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி சாடியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சுமார் 15 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர், ‘‘பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசானது வேலைவாய்ப்புக்கு ஊறுவிளைவிக்கக்கூடியது. தனது நண்பர்களுக்கு சொந்தமில்லாத வர்த்தகத்தையோ அல்லது வேலைவாய்ப்பையோ இந்த அரசு ஊக்குவிக்காது. மாறாக வேலைவாய்ப்பு இருப்பவர்களிடம் இருந்தும் பறிப்பதற்கு முயற்சிக்கிறது. போலியான தன்னிறைவானது நாட்டுமக்களிடம் இருந்து எதிர்பார்க்கப்படுகின்றது” என்றார்.
யோகி அரசு மீது பிரியங்கா சாடல்
உத்தரப்பிரதேசத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். மதுரா, இடா மற்றும் மெயின்புரி மாவட்டங்களிலும் ரைவஸ் காய்ச்சல் பாதிப்புக்கள் பரவியுள்ளன. இது குறித்து காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்காகாந்தி தனது டிவிட்டர் பதிவில், ‘‘கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மற்றும் அதன் கொடூரமான விளைவுகளில் இருந்தும் உத்தரப்பிரதேச அரசு எந்த பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லையா? பாதிக்கப்பட்டவர்களுக்கு சுகாதார சேவை மற்றும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தி இருக்கிறார்.