புதுடெல்லி: நாடு முழுவதும் சாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்ட அறிக்கையில், `சாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து ஆராய மூத்த தலைவர்கள் வீரப்ப மொய்லி, அபிஷேக் மானு சிங்வி, சல்மான் குர்ஷித் தலைமையில் ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. மோகன் பிரகாஷ், ஆர்பிஎன். சிங், புனியா குல்தீப் பிஷ்னோய் உள்ளிட்ட தலைவர்களும் இதில் இடம் பெற்றுள்ளனர்,’’ என்று கூறப்பட்டுள்ளது.இது குறித்து சிங்வி கூறுகையில், ``பல மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வரையறுத்ததை விட கூடுதலாகி விட்டது. எனவே, சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது அவசியம்,’’ என்றார்.