புதுடெல்லி: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சட்டத்திற்கு புறம்பாக சொத்து சேர்த்த விவகாரத்தில் போதிய ஆதாரம் உள்ளதால் எங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டாம் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் நேற்று கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக முன்னாள் பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, கடந்த 2011 முதல் 2013 வரை வருமானத்திற்கு அதிகமாக சட்டத்திற்கு புறம்பாக சொத்து சேர்த்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் இரு நீதிபதிகளிடையேயான மாறுபட்ட தீர்ப்பால் வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரிப்பது குறித்து முடிவெடுக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டு தற்போது விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் நிலுவையில் அமர்வில் உள்ளது.
இதையடுத்து இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் விதிமுறைகளை சரியான முறையில் பின்பற்றாமல் விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இது காலம் கடந்த குற்றச்சாட்டு என்பதால் அதில் முகாந்திரம் இல்லை. அதனால் உயர்நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் ராஜேந்திர பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் 19ம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் நிலையில் மேற்கண்ட விவகாரத்தில் தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிஸ்டாட்டில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சட்டத்திற்கு புறம்பாக சொத்து சேர்த்த விவகாரத்தில் போதிய ஆதாரம் உள்ளது. மேலும் இதுதொடர்பான வழக்கை உயர்நீதிமன்றமும் விசாரணை நடத்தி வருகிறது. இப்போது அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதனால் இந்த விவகாரத்தில் எங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எந்தவித உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.