சென்னை: வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பரின் இரண்டாவது ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜாமீன் வழங்க கோரி, மீரா மிதுனும், சாம் அபிஷேக்கும் இரண்டாவது முறையாக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்த போது அரசுத் தரப்பில் ஆஜரான சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் சத்யா, பட்டியலின மக்களை புண்படுத்தும் வகையில் மீரா மிதுன் பேசி இருப்பது சமுதாயத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதில் பாலின ரீதியான முன்னுரிமை வழங்க கூடாதெனவும், தற்போது ஜாமீன் வழங்கினால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்று எதிர்ப்பு தெரிவித்தார்.
அதே போல மீரா மிதுனின் நண்பர் சாம் அபிஷேக்கும் எல்லா வகையிலும் மீரா மிதுனின் செயலுக்கு உடந்தையாக இருந்துள்ளதாகவும், மீரா மிதுனின் வீடியோக்களை படம் பிடிப்பதும் பதிவேற்றம் செய்வதும் அவர் தான் எனவும் எடுத்துரைத்தார். அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி செல்வகுமார், மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பர் சாம் அபிஷேக்கின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.