மதுரை: மதுரை அரசு மருத்துவமனை பிரசவ வார்டின் லிப்டில் சிக்கிய குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 13 பேரை, தீயணைப்பு வீரர்கள் அரைமணி நேரம் போராடி மீட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு உள்ளது. இங்குள்ள லிப்டில் நேற்று குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 13 பேர் ஏறி சென்றபோது, இடையில் லிப்ட் பழுதாகி நின்றது. இதையடுத்து அனைவரும் வெளியேற முடியாமல் தவித்தனர். உள்ளே மாட்டிக் கொண்ட இவர்கள் சத்தமிட்டு கத்தினர்.
இவர்களில் ஒருவர் தீயணைப்புத்துறை மற்றும் போலீசாருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். தல்லாகுளம் தீயணைப்பு வீரர்கள், மருத்துவமனை காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, லிப்ட் கதவை வெட்டி எடுத்து அரை மணி நேரம் போராடி, 13 பேரையும் பத்திரமாக மீட்டனர். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் அதிகமிருந்ததால் பதற்றத்தில் இருந்த அவர்களுக்கு முதலுதவி சிகிச்சையும் வழங்கப்பட்டது.