காங்கயம்: அருணகிரிநாதரால் பாடல் பெற்ற காங்கயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்ரமணியசாமி கோயிலின் சிறப்புகளில் பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். நாட்டில் ஏற்படும் இன்னல்கள் மகிழ்ச்சியை முன்னதாகவே உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது இந்த உத்தரவு பெட்டி. சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து, குறிப்பால் உணர்த்தி அது சம்மந்தமான பொருட்களை உத்தரவு பெட்டியில் வைப்பது தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.
பக்தர் கனவில், சிவன்மலை ஆண்டவர் வந்து, குறிப்பிட்ட பொருளை கொண்டு வந்து தருமாறு கேட்டுக் கொள்வார்.பக்தர் கூறும் தகவலை, அர்ச்சகர்கள் சுவாமி சன்னதியில், வெள்ளை மற்றும் சிவப்பு பூ வைத்து உத்தரவு கேட்பர். வெள்ளை பூ விழுந்தால் மட்டுமே அந்த பொருள் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்யப்படும். இதுவரை உத்தரவு பெட்டியில் மண், துப்பாக்கி, மஞ்சள், இளநீர், தங்கம் சர்க்கரை, கணக்கு நோட்டு என பல்வேறு பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது அவ்வாறு வைத்து பூஜை செய்யப்படும் பொருள் சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது.
நேற்று திண்டுக்கல் மாவட்டம் ஒய்யப்பம் பட்டியைச் சேர்ந்த ரேணுகாதேவி (60) என்பவரது கனவில் உத்தரவான வில், அம்பு ஆண்டவன் சன்னதியில் உத்தரவு பொருளை வைத்து உத்தரவு கேட்கப்பட்டது. வெள்ளைப்பூ வந்ததால் ஏற்கனவே உத்தரவு பெட்டியில் இருந்த பொருள் எடுக்கப்பட்டு, ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்று முதல் வில், அம்பு வைத்து பூஜை செய்யப்படுகிறது. நாட்டில் தர்மம் நிலைக்கும் என்பதை குறிக்கும் வகையில் வில், அம்பு உத்திரவானது என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.