×

விபத்தால் நிலைகுலையாமல், ஓங்கி உயர்ந்து புதிய சாதனை: அவனி லெகாராவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!!

டெல்லி : டோக்கியோவில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக துப்பாக்கி சுடும் வீராங்கனை அவனி லெகாராவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் நடந்த மகளிருக்கான 10 மீட்டர் ரைஃபிள், 50 மீட்டர் ரைஃபிள் ஆகிய பிரிவுகளில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

ஜெய்ப்பூரைச் சேர்ந்த அவானி லேஹராவுக்குக் கடந்த 2012-ம் ஆண்டு நடந்த கார் விபத்தில் அவரின் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பாராலிம்பிக்ஸ் ஒலிம்பிக் போட்டியில் இரு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை எனும் பெருமையைப் பெற்ற அவனி லெகாராவுக்குப் பலதரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இது குறித்து சுட்டுரையில்  பிரதமர் மோடி கூறியதாவது;‘‘டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் மேலும் பல அற்புத நிகழ்வுகள். அவானி லெகாராவின் அற்புதமான விளையாட்டால் உற்சாகம் அடைந்தேன். நாட்டிற்காக வெண்கலப் பதக்கத்தை பெற்று வந்ததற்கு வாழ்த்துகள். அவருடைய எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். எனத் தெரிவித்துள்ளார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் டோக்கியோ பாராலிம்பிக்சில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கங்கள் வென்ற இந்தியப் பெண் வீராங்கனை அவனி லேகரா அவர்களைப் பாராட்டி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி

பாராலிம்பிக்சில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஒன்றுக்கு மேற்பட்ட பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை அவனி லேகரா பெற்றுள்ளதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
முதுகுத்தண்டு வடத்தில் பாதிப்பை ஏற்படுத்திய விபத்தால் நிலைகுலையாமல், நாம் அனைவரும் பின்பற்றத்தக்க எடுத்துக்காட்டாய் அவர் ஓங்கி உயர்ந்துள்ளார். அவரது மகத்தான ஊக்கத்தையும் சாதனையையும் நான் போற்றுகிறேன்,எனத் தெரிவித்துள்ளார்.


Tags : Modi ,Chief Minister ,Stalin ,Avani Lekara , நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின்,வெண்கலப் பதக்கம்
× RELATED இந்திய தேர்தல் ஆணையம் நடுநிலையை...