காபூல்: ஆப்கானிஸ்தானின் புதிய அரசில் அங்கம் வகிப்பவர்கள் குறித்த அறிவிப்பை தாலிபான்கள் இன்று பிற்பகல் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியதை தொடர்ந்து புதிய அரசை அமைக்கும் முயற்சியில் தாலிபான்கள் ஈடுபட்டுள்ளன. பிரதமர் மற்றும் அதிபருக்கும் மேலாக சுப்ரீம் லீடர் எனப்படும் உயர் தலைவர் செயல்படுவார். இந்த பதவியில் தங்கள் இயக்கத்தின் உச்ச அதிகாரம் பெற்ற முல்லா ஹிபத்துல்லா அகுந்த்சாதாவை நியமிக்க தாலிபான்கள் முடிவு செய்துள்ளன. புதிய அரசு குறித்த அறிவிப்பு இன்று பிற்பகல் வெளியாகும் என்றும் முக்கிய பதவிகளில் பெண்களுக்கு இடமில்லை எனவும் தாலிபான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கண்டித்து ஹெராக் நகரில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு ஏராளமான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் தெரிவித்ததாவது, நாங்கள் கல்வி, வேலைவாய்ப்பு, சுதந்திரம், பாதுகாப்பு மற்றும் பொது மன்றங்கள், சமூக நடவடிக்கைகள், அரசியல் ஆகியவற்றில் உரிமை கோருகிறோம். இந்த முக்கியமான உரிமைகளுக்காக நாங்கள் பல ஆண்டுகளாக போராடினோம் என்று குறிப்பிட்டார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தாலிபான் அரசு போல புதிய அரசு இருக்காது என்றும் சில மாற்றங்கள் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.