×

தாரமங்கலம் அருகே பயங்கரம் திருநங்கையாக மாறுவதாக கூறியதால் வாலிபர் கத்தியால் குத்திக்கொலை-அண்ணன் வெறிச்செயல்

தாரமங்கலம் : தாரமங்கலம் அருகே, திருநங்கையாக மாறப்போவதாக கூறிய வாலிபரை, அவரது அண்ணனே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே துட்டம்பட்டி கிழக்குமேடு பெருந்தலையான் வட்டத்தை சேர்ந்தவர் மகேஸ்வரி. கல் உடைக்கும் தொழிலாளியான இவருக்கு விஜி, கண்ணன் என்ற மகன்களும், கோகிலா என்ற மகளும் உள்ளனர். மகேஸ்வரியின் கணவருடைய அண்ணன் மூர்த்தி, அவரது மனைவி பார்வதி ஆகியோர், கடந்த 15 வருடங்களுக்கு முன் இறந்து விட்டனர். இதனால், அவர்களது மகன்களான செல்வராஜ் (22), அசோக்குமார் (17) ஆகியோரை, மகேஸ்வரி தனது பொறுப்பில் வளர்த்து வந்துள்ளார்.

அசோக்குமார் பிளஸ் 1 வரை படித்துள்ளார். இந்நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன், அசோக்குமார் வீட்டை விட்டு மாயமானார். விசாரித்ததில், அவர் செங்கல்பட்டில் திருநங்கைகளுடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற செல்வராஜ், செங்கல்பட்டில் இருந்து அசோக்குமாரை தாரமங்கலத்திற்கு அழைத்து வந்தார். அப்போது, இனிமேல் யாரிடமும் சொல்லாமல், எங்கும் செல்ல கூடாது என அறிவுரை கூறியுள்ளனர்.

இதனிடையே, கடந்த ஒரு வாரமாக அசோக்குமார் தனக்கு இங்கிருக்க விருப்பமில்லை என்றும், மீண்டும் செங்கல்பட்டுக்கு சென்று திருநங்கைகளுடன் வசிக்க போவதாகவும் கூறி வந்துள்ளார். நேற்று காலை, அசோக்குமார் தனது துணிகளை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து புறப்பட முயன்றார். அப்போது அங்கு வந்த அவரது அண்ணன் செல்வராஜ், அசோக்குமாரை தடுத்து நிறுத்தி அங்கு செல்லக்கூடாது என கூறினார். ஆனால், அதனை ஏற்க மறுத்த அசோக்குமார், அண்ணனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ், ஆடு அறுக்கும் சூரிக்கத்தியால் அசோக்குமாரை குத்தினார். இதில் படுகாயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு, தாரமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே அசோக்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து மகேஸ்வரி அளித்த புகாரின் பேரில், தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன், அசோக்குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், தம்பியை குத்திக் கொலை செ்யத செல்வராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருநங்கையாக மாறப்போவதாக கூறியதால், தம்பியை குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Tharamangalam , Tharamangalam: Near Tharamangalam, a boy who claimed to be a transgender man was stabbed to death by his brother.
× RELATED நாமக்கல் தொழிலதிபர் வீட்டில் ரூ.4.8 கோடி...