அய்சால்: மிசோரமில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் ரூ. 121 ேகாடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பன்றிகள் இறந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் மக்கள் அவதியுற்று வரும் நிலையில், மிசோரமில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் கால்நடை வளர்ப்போர் ெபரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து மிசோரம் மாநில கால்நடை பராமரிப்பு மற்றும் அறிவியல் துறை இணை இயக்குனர் லால்மிங்தங்கா கூறுகையில், ‘ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் கடந்த மார்ச் மாதம் முதல் கடந்த ஐந்து மாதங்களில் மிசோரமில் மட்டும் 25,000க்கும் மேற்பட்ட பன்றிகள் பலியாகி உள்ளன.
இதனால் ரூ.121 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ் நோய் பாதிப்புக்கு ஆளாகாத 9,458 பன்றிகள் கொல்லப்பட்டன. குறைந்தது 239 கிராமங்கள் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 130 பன்றிகள் இந்த நோயால் உயிரிழந்தது. இதன்மூலம் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 25,256ஐ எட்டியுள்ளது. மிசோரமில் கிட்டதிட்ட 11 மாவட்டங்களில் இந்நோய் பரவியுள்ளது. தலைநகர் அய்சாலில் மட்டும் 10,766 பன்றிகள் இறந்துள்ளன. தொடர்ந்து லுங்லீ 4,129 ஆகவும், செர்ஷிப் 3,490 ஆகவும் உள்ளது. பங்களாதேஷ், மேகாலயா போன்ற பகுதியில் இருந்து அதிகளவில் பன்றிகள் இறக்குமதி செய்யப்படுவதால், தொற்று வேகமாக பரவுகிறது.
இருந்தாலும், ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலானது, மனிதர்களுக்கு பரவுவதில்லை. கடந்த மார்ச் 21ம் தேதி பங்களாதேஷ் எல்லைக்கு அருகிலுள்ள தெற்கு மிசோரமின் லுங்லே மாவட்டத்தில் உள்ள லுங்க்சன் கிராமத்தில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் அறிகுறியால் ஒரு பன்றி இறந்தது. அதிலிருந்து தொடர்ந்து பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. மாநில அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது’ என்றார்.