×

இட ஒதுக்கீடு பின்பற்றப்படாத அவலம் சென்னை ஐஐடி பேராசிரியர்கள் நியமனத்தில் தலித்கள் புறக்கணிப்பு

* 596ல் 15 பேர் மட்டுமே நியமனம்
* ஆர்டிஐ மூலம் தகவல் அம்பலம்

மதுரை: மதுரையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் கார்த்திக், சென்னை ஐஐடியிடமிருந்து ஆர்டிஐ மூலம் பெற்ற தகவல் வருமாறு :  2019-20 கல்வியாண்டு நிலவரப்படி 9,882 மாணவர்கள் கொண்ட சென்னை ஐஐடியில் 596 பேராசிரியர்கள் (பேராசிரியர்கள் 270,  இணை பேராசிரியர்கள் 122, உதவி பேராசிரியர்கள் 123) பணி புரிகின்றனர். அதில் தலித் பேராசிரியர்கள் வெறும் 15 பேர், எஸ்டி பிரிவினர் 2 பேர் மட்டுமே. இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. சென்னை ஐஐடியின் 9,882 மாணவர்களில், எஸ்சி பிரிவினர் 1,212 மாணவர்கள், எஸ்டி 526 மாணவர்கள். எஸ்சி மாணவர்கள் 12சதவீதம், எஸ்டி  மாணவர்கள் 5சதவீதம். பாதியிலேயே இடைவிலகல் செய்யும் மாணவர்களில் எஸ்சி, எஸ்டி மாணவர்களின் சதவீதம் பொது பிரிவினரைவிட அதிகம். அதாவது, கடந்த 2015-16 முதல் 2018-19 வரையிலான 4 ஆண்டுகளில் முதுநிலை படிப்பில் 286 மாணவர்கள் இடைவிலகல் செய்துள்ளனர். இதில் தலித் மாணவர்கள் 42 பேர், பழங்குடியினர் 25 பேர். ஐஐடியில் இடம் கிடைப்பதே சவாலான ஒன்று. அதிலும் இடம் கிடைத்து படிக்க செல்லும் மாணவர்களுக்கு பாடப்பிரிவுகள் கடினம், குடும்ப பொருளாதாரம், மாணவர்- பேராசிரியர் இடையே இணக்கமான நட்புறவு இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

தொடர்ந்து ஐஐடி நிர்வாகத்தின் மீது விமர்சனங்கள் எழுகின்றன. மாணவர்களின் நலனுக்காக பிரத்யேகமாக  “மித்ர் / சாதி” என்கிற திட்டம் மனோதத்துவ நிபுணர் மற்றும் மருத்துவர்களை கொண்டு ஆன்லைன் மூலம் நடைமுறையில் உள்ளது. அதோடு சீனியர் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை கொண்டு ‘‘வெல்னஸ் டீம்’’ ஆரோக்கிய நலன் என்கிற கவுன்சிலிங் ஏற்பாடுகள் உயர்கல்வி நிறுவனங்களில் பொதுவாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் இதுபோன்ற திட்டங்கள் முழுமையாக செயல்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது.  சென்னை, மும்பை, கான்பூர், ஐதராபாத், டெல்லி உள்ளிட்ட 8 ஐஐடிக்களில் கடந்த 2010ம்  முதல் 2019 வரையிலான 10 ஆண்டுகளில் 56 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். அதில் அதிகபட்சமாக சென்னை ஐஐடியில் 14 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். உச்சகட்டமாக 2019ல் மட்டும் 4 பேர் சென்னை ஐஐடியில் இறந்துள்ளனர். நடப்பாண்டில் கடந்த ஜூலை மாதம் உன்னிகிருஷ்ணன் என்ற ஆய்வு மாணவர் மர்மமான முறையில் இறந்தார். இவ்வாறு தகவல் தெரியவந்துள்ளது.

 கார்த்திக் கூறும்போது, ‘‘சென்னை ஐஐடியில் பேராசிரியர்களின் நியமனத்தில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி இடைவிலகல் எண்ணிக்கைகளை குறைக்கும் விதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.



Tags : Dalits ,IIT Chennai , Reservation, Shame, IIT Professor
× RELATED டேட்டா சயின்ஸ் படித்த 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு: சென்னை ஐ.ஐ.டி தகவல்